சப்ப பௌலர்களிடம் தனது வீரத்தை காட்டும் விராட் கோஹ்லியை சச்சின்,டிராவிட் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூஷப்…!
இஸ்லாமாபாத்: சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியை ஒப்பிட்டுப் பேசமுடியாது என்று பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘ நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்த போது, மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகள் மிகவும் கடினமானதாக/வலுவானதாக இருந்தன.
எங்கள் எதிர் அணிகள் அதிக பலத்துடன் இருப்பர். அவர்களுடன் விளையாடி வெற்றி பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். நான் விளையாடும் போது இந்திய அணியில் சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்கள் விளையாடினர். அவர்களுடன் விளையாடும் போதுதான் கிரிக்கெட்டில் அதிக பாடம் கற்றுக்கொண்டேன்.
மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிலும் கிலென் மெக்ராத் மற்றும் ஷேன் வார்ன் போன்ற திறமையான வீரர்கள், தற்சமயம் இல்லை. அதே போல் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் முன்பு இருந்தது போல் திறமையான வீரர்கள் இப்போது இல்லை.
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தற்போதுள்ள வீரர்கள், சச்சின் மற்றும் டிராவிட் போன்ற தரமான வீரர்களாக இல்லை. அவர்கள் பலமில்லாத பவுலர்களுக்கு எதிராக ஆடி ரன்களை குவிக்கின்றனர். ஆனால் சச்சின் போன்ற வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற திறமையான பந்து வீச்சாளர்களுடன் மோதி அதிக ரன்களை குவித்தனர்.
இன்றைய கிரிக்கெட் விதிமுறைகளும் எளிதாக மாறிவருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லி நல்ல பேட்ஸ்மேன். ஆனால் அவரை சச்சின், டிராவிட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டுப் பேசமுடியாது.’ என்று தெரிவித்துள்ளார் முகமது யூசுப்.