தூங்கும் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவனுக்கு 9 ஆண்டு சிறை…!
இங்கிலாந்தின் நியூகேஸ்டிலில் மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி வந்த கணவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை அவரது அனுமதியின்றி 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை அவரது கணவர் செல்போனில் படமெடுத்தும் வைத்திருந்துள்ளார். இது தொடர்பான வழக்கில் கணவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூகேஸ்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கமாக தனது செல்போனை தன்னுடனே வைத்திருக்கும் கணவர், கடந்த மார்ச் மாதத்தில் ஒருநாள் அலுவலகம் செல்கையில் அதை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். செல்போன் வீட்டில் இருப்பதை பார்த்த மனைவி எதேச்சையாக அதை எடுத்து உள்சென்று பார்க்கையில், தான் உறக்கத்தில் இருக்கையில் தனது கணவர் தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதுடன், அதை படமெடுத்து வைத்துள்ளதையும் பார்த்துள்ளார்.
இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி, கணவனின் அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு, ‘நீ என்னை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்களை உனது செல்போனில் இப்போதுதான் பார்த்தேன்” என கூறிவிட்டு வைத்துவிட்டார்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த கணவர் வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இரவில் மது அருந்திவிட்டு ஆழ்ந்து தூங்கும் பழக்கம் மனைவிக்கு இருந்ததால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கணவன் இத்தகைய செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.