தட்டி தூக்கிய தமிழ்நாடு போலீஸ்! 48 மணிநேரத்தில் நடந்தது என்ன?! திக் திக் நிமிடங்கள்…

Default Image

திருச்சியில் பிரதான இடமான சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரிய நகைக்கடை தான் லலிதா ஜிவல்லரி.  இந்த நகைக்கடையில் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட அதிகாலை 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் கிலோ கணக்கில் கோடிக்கணக்கான நகைகளை இரு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இவர்கள் நகை கடையின் பின்புற சுவரில் ஒரு நபர் மட்டும் செல்லக்கூடிய அளவிற்கு துளையிட்டு, அதனுள் புகுந்து நகை கடைக்குள் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் உடல் முழுக்க மறைக்கும் அளவிற்கு உடை உடுத்தியும், முகத்தில் மாஸ்க் அணிந்தும், கைரேகை ஏதும் படாதவாறு கையுறை அணிந்தும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்து வந்ததால் அவர்கள் முகம் தெரியவில்லை.
பின்னர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல நகை கடை ஊழியர்கள் கடையை திறந்தனர். திறந்தவுடன் உள்ளே தரைதளத்தில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தவுடன் அதிர்ச்சியாகி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் உடனடியாக விரைந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள், கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் முகம் இல்லை. கையுறை அணிந்து திருட்டில் ஈடுபட்டதால் கைரேகையும் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் செல்லும் போது மிளகாய் பொடி தூவி சென்றதால் மோப்ப நாய் கரூர் நெடுஞ்சாலை வரை சென்று திரும்பி விட்டது. இருந்தும் போலீசார் தங்களது முயற்சிகளை கை விடவில்லை.
இந்த வழக்குக்காக தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். முதலில் புதுக்கோட்டையில் தனியார் விடுதியில் சந்தேகிக்கும் படியாக வடமாநிலத்தவர்கள் தங்கியிருப்பதாக வந்த புகாரின் பெயரில், அவர்கள் 6 பேரையும் பிடித்தனர்.  அதில் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால், அவரது மண்டை பகுதி உடைந்து, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மீதம் 5 பேரையும் ரகசிய அறையில் வைத்து தீவிர விசாரணை செய்தனர். அவர்கள் கொள்ளையடிக்கவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்தும் தங்களுக்கு கிடைத்த சிறு சிறு தகவல்களை அடிப்படையாக கொண்டு தீவிரமாக தேடிவந்தனர். அந்த வேளையில் திருவாரூரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்து இருவர் தப்பி ஓடி உள்ளனர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் அதில் ஒருவனை மட்டும் பிடித்துள்ளனர். பின்னர் அந்த வாகனத்தில் மூட்டையாக நகைகள் கட்டிவைக்கப்பட்டிருப்பது  தெரிய வந்துள்ளது. அந்த நகைகளை ஆராய்ந்த போது அவை அனைத்தும் லலிதா ஜூவல்லரியில் திருட்டு போனவை என நிரூபணம் ஆனது.
பின்னர், பிடிபட்ட அந்த ஒருவனை விசாரித்ததில் அந்த கொள்ளையன் பெயர் மணிகண்டன் எனவும், தன் கொள்ளையடித்த நகைகளில் தனது பங்கை மட்டும் பிரித்து எடுத்து வந்ததாகவும், விசாரணையின்போது கூறியுள்ளான். மேலும் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் பெயர் சீராத்தோப்பு சுரேஷ் எனவும் கூறியுள்ளான். அந்த சுரேஷின் உறவினர் முருகன் என்பவர் இதற்கு முன்னர் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பலே திருடனாக வலம் வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் தப்பி ஓடிய சுரேஷ் மேலும் அவரது உறவினர் முருகன் ஆகியோரையும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகைக்கடை கொள்ளை வழக்கில் கிடைத்த சிறு சிறு தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 48 மணி நேரத்தில் கொள்ளையனையும், கொள்ளையடித்த நகைகளையும் கண்டுபிடித்த திருச்சி போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்