அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற கோட்பாட்டை தகர்த்தெறிந்த முதல் பெண் போராளி!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, முதல் பெண் மருத்துவர் மட்டுமல்லாது, இவர் சமூக போராளியும், தமிழ் ஆர்வலரும் ஆவார். இவர் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாராயணசாமி- சந்திரம்மாள் ஆகியோருக்கு முதல் மகளாக, புதுக்கோட்டை, திருகோகர்ணம் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரபல வழக்காறிஞரும், தாயார் பாடகரும் ஆவார்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற பழைய பஞ்சாங்கத்தை தகர்த்தெறிந்து, தனது 4 வயதிலேயே கல்வி பயணத்தை தொடங்கிய இவர், தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில வேண்டும் என்று விருப்பம் கொண்டார். இவர் தனது கல்லூரி படிப்பை தொடருவதற்கு, அவரது தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார்.

கல்லூரி பயில்வதற்க்கான எந்த வாய்ப்புகளுக்கு, வசதிகளும் இல்லாத நிலையில், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால், அன்று இருந்த தலைவர்கள் பலரும், பெண்கள் பயில்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்னார் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், எதிர்ப்புகளை தூக்கி எறிந்துவிட்டு, அவருக்கு கல்லூரியில் பயில அனுமதி வழங்கினார்.

தனது வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி வெற்றிகளை சம்பாதித்த முத்து லெட்சுமி ரெட்டி, சிறிது காலம் நோயால் அவதிப்பட்டார். அதன்பின் அவரது தாயாரும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.  இவரது இந்த அனுபவம், அவரை மருத்துவராக வேண்டும் என்ற விதையை விதைத்தது.

இதனையடுத்து முத்து லெட்சுமி ரெட்டி, 1907-ல் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவக்கல்லூரியில் முதன்முதலில் சேர்ந்த முதல் பெண் இவர் தான். பல வெற்றிகளைத் தன்வசப்படுத்திய முத்துலெட்சுமி ரெட்டி, 1912-ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றார்.

திருமணத்தில் நாட்டம் இல்லாத முத்துலெட்சுமி ரெட்டி, தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக, 1914-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுந்தர்ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராம் மோகன், கிருஷ்ணமூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

முதல் பெண் மருத்துவரும், சமூக போராளியுமான முத்துலெட்சுமி ரெட்டிக்கு 1956-ல் மத்திய அரசு பத்மபூஷன் விருதினை வழங்கி கௌரவித்தது. இவர் 1968-ம் ஆண்டு ஜூலை மாதம் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.