மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது – கமல்ஹாசன்
மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.
அதேபோல் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.அதேபோல் மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.
பின்னர் 2019 மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
இந்நிலையில் ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,இது பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அல்ல. நம் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் ஆகும் . காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் மக்களை படித்தவர்கள்.மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.