‘இர்மா’ புயலுக்கு 3 பேர் பலி 60 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு..!
இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்தது. ஆரம்பத்தில் மணிக்கு 150 முதல் 170 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் நகர்ந்த இந்த புயல் 4-ம் நிலைப் புயலாக மாறி அமெரிக்காவின் தீவு நகரான கீ வெஸ்ட்டை தாக்கியது. அப்போது கனத்த மழையும் கொட்டியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதி கடற்கரையோர நகரங்களான நேப்பிள்ஸ், மைமர்ஸ், டம்பா ஆகியவற்றை இர்மா தாக்கும் என்பதால் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் புயலுக்காக 60 லட்சம் பேர் இடம் பெயர்ந்தது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆவர்.
இர்மா புயலுக்கு புளோரிடா மாகாணத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் ஹார்டி மாவட்டத்தின் துணை ஷெரீப்பும் ஒருவர் ஆவார். இந்த புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.