9 மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டு விட்டு….கஜா புயல் மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்…!!
தஞ்சையில் 9- மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வரும் தஞ்சை இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கரையை கடந்த ‘கஜா’ புயல் தஞ்சை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு உள்ளது.
புயல் கரையை கடந்த வேளையில் பலத்த காற்று வீசியதால் விவசாய பூமியான பட்டுக்கோட்டையில் தென்னை, மா, வாழை, வேப்ப மரங்கள், தேக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இளைஞர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். இதில், கரம்பையம் கிராமத்தை சேர்ந்த ரகு என்ற இளைஞர் தனது கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி புரிய களத்தில் இறங்கியுள்ளார்.
அவர் கூறும்போது, “எனது மனைவி 9 மாத கர்ப்பிணி. நான் விட்டுக்கு சென்று 2 நாட்கள் ஆகின்றன. இளைஞர்கள் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து வருகிறோம்.
அத்துடன் தீயணைப்புத்துறையினருக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். இங்கே புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் நிறைய குழந்தைகள் உள்ளனர். ஒரு வயது, ஒன்றரை வயது குழந்தைகள் பால் மற்றும் உணவின்றி தவித்து வருகின்றனர். நாங்கள் இளைஞர்கள் இணைந்து இன்று அவர்களுக்கு 1,000 லிட்டர் பால் வழங்கியுள்ளோம். அந்த குழந்தைகளுக்கு அத்யாவசிய தேவையான உணவு, பால் மற்றும் தண்ணீரை மட்டும் அரசு வழங்கினால் ரொம்ப உதவியாக இருக்கும் என கூறினார்.9- மாத கர்ப்பிணி மனைவியை தனியே விட்டுவிட்டு மக்களுக்கு உதவி வரும் தஞ்சை இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி விட்டு செல்கின்றனர்.
dinasuvadu.com