முதலீட்டாளர் மாநாடு நடத்தலாமா..? முதல்வர் ஆலோசனை
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமையில், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழக அரசு சார்பில், 2015 செப்டம்பரில், சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது; 2018ல், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான, முதற்கட்ட ஆலோசனை கூட்டம், முதல்வர் தலைமையில், நேற்று, தலைமை செயலகத்தில் நடந்தது. துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் பங்கேற்றனர்.கூட்டத்தில், 2015 மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள்; தொழில் துவங்கியுள்ள நிறுவனங்கள்; துவங்காமல் உள்ள நிறுவனங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, மாநாட்டை சிறப்பாக நடத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.