தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் திங்களன்று 3வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே, 22ல், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஊர்வலமாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். ஏராளமான பொதுமக்களும் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக, தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம் மற்றும் முத்தையாபுரம் காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழக அரசு, துப்பாக்கிச் சூடு வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு, உயர் நீதிமன்ற கிளை கடந்த ஆக.14ல் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை, சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 20 அமைப்புகள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
சி.பி.ஐ., எஸ்.பி., சரவணன் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழுவினர், சனிக்கிழமை மாலை தூத்துக்குடி வந்தனர். சிப்காட், வடபாகம், தென்பாகம் காவல்நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு ஆவணங்களை சேகரித்தனர். தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு தொடர்பாக, தற்போது சேகரித்த ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஒப்படைத்த ஆவணங்களுடன் ஒப்பீடு செய்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட வட்டாட்சியர் சந்திரனிடம், ஞாயிறன்று காலை, விருந்தினர் மாளிகையில், விசாரணை நடத்தினர்.
பின், வாகனங்கள் எரிக்கப்பட்ட நான்கு வழிச்சாலை பகுதி, துப்பாக்கிச் சூடு நடந்த ஆட்சியர் அலுவலக பகுதிகளை, எஸ்.பி., சரவணன், ஏ.எஸ்.பி., ரவி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் திங்களன்று 3வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
DINASUVADU