"ரூ 10_க்காக தகராறு"20 வருட நண்பனை குத்திக்கொன்ற நபர்..!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெறும் 10 ரூபாய்க்காக 20 ஆண்டுகள் பழகிய நண்பனை முடிதிருத்தும் கத்தரிக்கோலால் குத்தி கொலைசெய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியைச் சேர்ந்த அஹிபரான் லால் என்பவர் சலூன் கடை வைத்துள்ளார். அவரது நண்பரான பிரேம்பால் கங்வார் என்பவர் நேற்று மாலை கடைக்கு வந்துள்ளார். அப்போது, அவர்களுக்கிடையே 10 ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டுள்ளது.
நண்பர்கள் விளையாட்டாக சண்டை போடுகின்றனர் என மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்க, இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு கைக்கலப்பாக ஆனது. திடீரென பிரேம்பால் அஹிபரானை அடிக்க, ஆத்திரமடைந்த அவர் கையில் வைத்திருந்த முடிதிருத்தும் கத்தரிக்கோலால் பிரேம்பாலின் நெஞ்சில் வேகமாக குத்தியுள்ளார்.
மேலும், சண்டையை தடுக்க வந்த பிரேம்பாலின் இரு மகன்களுக்கும் சரமாரியாக கத்திக்குத்து விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேம்பாலை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இருவருக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக அஹிப்ரான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
DINASUVADU