பெங்களூரு: 40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் மென்பொருள் வல்லுனரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் யஸ்வந்த்பூரில் வசிக்கும் 31 வயதான இளைஞர் அபினவ் ஸ்ரீவஸ்தவ், கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்று, கால் டாக்ஸி நிறுவனமான ஓலாவில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து அபினவ் ஆதார் தகவல்களை திருடுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அபினவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈ. ஹாஸ்பிடல் என்ற செயலிக்காக தகவல் சரிபார்ப்பு செல்போன் செயலியை அபினவ் உருவாக்கியதுடன், அதை கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறச் செய்து ஆதார் தகவல்களை திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் அபினவ் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாக கூறியுள்ளார். ஆனால் மக்களின் கருவிழி மற்றும் கைரேகை பதிவுகள் திருடப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.