தொடரை இழந்த இந்திய அணி ! நாளைய போட்டியிலாவது வெற்றிபெறுமா? ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை  கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 என்ற இமாலய இலக்கை இலக்காக நிர்ணையித்தது.ஆனால் இமாலய இலக்கையும் நியூசிலாந்து அணி எளிதாக வென்றது.இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங் தான்.டி -20 தொடரில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ஒருநாள் தொடரில் அவர்கள் மீண்டு வந்து இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்கள்.300 ரன்களுக்கு  மேல் என்ற கடின இலக்கை துரத்தும் போது பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது சற்று கடினம் தான்.அந்த வகையில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்களிப்பு அதிகம் இருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் கௌவுரமான ரன்னை அடித்து கொடுக்க நடுவரிசை வீரர்களும் நிலைத்து நின்று ஆடினார்கள்.இதன் விளைவாக நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 348 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.இதன் பின்னர் 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.273 என்ற எளிமையான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயம் செய்தது.ஆனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்தது.பின் நடுவரிசை மற்றும் ஆல் ரவுண்டர்கள் போராடியும் இந்திய அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.மேலும் நியூசிலாந்து அணியிடம் தொடரையும் இழந்தது.தொடரை  2-0 என்ற கணக்கில் கைப்பற்றி டி-20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியதற்கு பழி தீர்த்தது நியூசிலாந்து அணி. இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி நாளை  (பிப்ரவரி 11-ஆம் தேதி) டாருங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் உள்ளனர்.