ஸ்கூட்டர் மீது லாரி மோதி, 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் 3 பேர் உயிரிழப்பு.
உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மோதியதோடு மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஏறக்குறைய 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் ஸ்கூட்டரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கத்ரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
கத்ரா பகுதியில் உள்ள லால்பூர் கிராமத்தில் ராம்தீன், அவரது அண்ணனின் மனைவி மற்றும் அவரது மூன்று வயது மருமகன் ஆகியோர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் ஸ்கூட்டரில் பின்னால் இருந்து லாரி மோதியுள்ளது. இந்த மோதலில் ஸ்கூட்டர் லாரியுடன் சிக்கி சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய மூவரையும் பரேலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், லாரி ஓட்டுநர் தனது வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.