ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.

ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் உள்ள பிரியாணி மற்றும் கோழியை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரங்களில் ஆனந்த், அவரது மனைவி பிரியதர்ஷினி, மகன் சரண் மற்றும் மகள் லோஷினி ஆகியோர் உணவில் உள்ள விஷத்தின் காரணத்தால் அதன் அறிகுறிகளை உணர ஆரம்பித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உடனடியாக குடும்பத்தினர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், 10 வயது லோஷினி உணவு விஷத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆனந்த், பிரியதர்ஷினி மற்றும் சரண் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும், அதே ஹோட்டலில் உணவு உட்கொண்ட மற்ற 26 பேர் மயக்கம் அடைந்து உள்ளூர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆரணியின் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், தற்போது சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தெரிவித்துள்ள கூற்றின் அடிப்படையில், உணவு உட்கொண்ட ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஹோட்டல் உரிமையாளர் அம்ஜத் பாஷா மற்றும் அதன் சமையல்காரர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.