ஆடுகளத்தின் தன்மை குறித்து சர்ச்சை எழுந்ததால் தென்னாப்பிரிக்கா- இந்திய இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டமானது தினசரி ஆட்டநேரத்திற்கு முன்னரே முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி, 247 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 25 ரன்களும், கேப்டன் கோலி 41, ரஹானே 48, புவனேஷ்குமார் 33, ஷமி 27 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 17 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
பந்து தாறுமாறாக எகிறிய நிலையில், பும்ரா வீசிய பந்து தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரின் நெற்றியை பதம் பார்த்தது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் நடுவர்கள் ஆடுகளம் குறித்து விவாதித்தனர். பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் போட்டி நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
திட்டமிட்டபடி இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான 4ம் நாள் ஆட்டம் நடைபெறும். ஜொஹானெஸ்பார்க் ஆடுகளத்தில் நடந்த பிரச்னையால் இன்று ஆட்டம் நடக்குமா என சர்ச்சை எழுந்த நிலையில் ஐ.சி.சி. அறிவிப்பு செய்துள்ளது.