யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது – வதந்தி பரப்பினாரா?

ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பணிக்காக வந்தவர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,உண்மை நிலையை விளக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.மேலும்,சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோரின் பேச்சுவார்த்தையின் பேரிலும் தனியார் ஆலை முன் 18 மணி நேரமாக தொடர்ந்த பெண் தொழிலார்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி,தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

எனினும்,அனுமதியின்றி போராட்டம் நடத்தியது,பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்ட நிலையில்,தற்போது 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால்  ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகனை நேற்று திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,தனது கணவரை அழைத்து சென்று பல மணி நேரம் ஆன நிலையில்,அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை,அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என்றும்,தனது கணவரை கண்டுபிடித்து,போலீசாரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி திருச்சி புலனாய்வு உதவி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் தக்கலையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்பாட்டத்தில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை குறித்து சாட்டை துரைமுருகன் அவதூறாகப் பேசியதால் கைது செய்யப்பட்ட நிலையில்,தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.