மாடு மேய்த்த தகராறில் இளைஞர் அடித்து கொலை..!

மத்தியப்பிரதேசத்தில் மாடு மேய்த்த பிரச்சனையில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்றுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வசிப்பவர் கோவிந்த்( 26). இவர் தனது மாடுகளை வேறொருவர் நிலத்தில் மேயவிட்டுள்ளார். இதன் காரணமாக நில உரிமையாளர்களுக்கும் கோவிந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்வதன் பொருட்டு சமாதானம் பேச அழைத்து 5 பேர் கோவிந்தின் வீட்டுற்கு வந்து இவரை அழைத்து சென்றுள்ளனர்.

சமாதானம் பேச அழைத்து சென்ற இடத்தில் வைத்து கோவிந்தை 5 பேரும் சரமாரியாக தடியால் அடித்து தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த கோவிந்த் மயங்கி விழுந்துவிட்டார். பின்னர், கோவிந்தை மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து வந்து அவரின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நீங்கி சென்றுள்ளனர்.

கோவிந்தின் நிலையை கண்ட குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள இந்தூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கோவிந்த் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.