தவறாக நடக்க முயன்ற இளைஞன் கொலை -கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்!

திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு, ரத்தக்கறையுடனும் கையில் கத்தியுடனும் காவல் நிலையத்திற்கு வந்த இளம் பெண்ணை பார்த்து அதிர்ச்சி போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் அருகே உள்ள ஓரக்காடு அல்லிமேடு எனும் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் 19 வயது மகள் தான் கவுதமி. இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுனராக பணியாற்றி வரக்கூடிய அஜித்குமார் ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில், கௌதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க வெளியில் சென்ற போது, அவரை பின்தொடர்ந்த அஜித் குமார் கையில் கத்தியை வைத்து மிரட்டியதுடன் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கௌதமி, அஜித்குமார் கையில் வைத்திருந்த கத்தியை பறித்து அஜீத் குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அஜித்குமார் பலியாகியுள்ளார். அதன்பின் கத்தியுடன் கவுதமி காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த அஜித்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Rebekal