இந்த எண்ணிற்கு அழைத்தால், அரசின் சேவைகளை வீட்டிலிருந்தே பெறலாம் – புதிய திட்டம் அறிமுகம்.!

அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால் சேவைகளை விரைவில் பெற இயலும் என ஆளுநர் அறிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் கூட்டத்தொடரான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய பன்வரிலால் புரோகித், தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, பொருளாதாரம் புத்துயிர் பெறுவதாக தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு ரூ.5,264 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தினார். காவிரி தெற்கு வெள்ளாறு இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் வேளாண் சட்டத்தின் மூலம் நிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் இருக்கும் 12 மீனவர்களை மீட்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கை கப்பல் மோதி 4 மீனவர்கள் இறந்த விவகாரத்தில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற முதல்வரின் உதவி மையத்திற்கான 1100 என்ற எண்ணை அழைக்கும் சேவையை அறிவித்துள்ளார். இந்த எண்ணிற்கு அழைத்தால் அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும் என குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக வரும் மார்ச் மாதத்திற்குள் மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.  கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலை வழித்தடம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய தொழில்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

நகரப்பகுதியில் வீடு இல்லாத ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அடுக்கு மாடியில் ஒரு வீடு தரப்படும். ஊரக பகுதிகளில் ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் காங்கிரேட் வீடு கட்டி தரப்படும். மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுபடுத்தப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்