நீங்கள் சிறப்பாகத்தான் செயல்படுகிறீர்கள், இருந்தாலும் உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களை நேர்மறையாக எடுத்து கொள்ளுங்கள் – உச்ச நீதிமன்றம்!

சென்னை உயர்நதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து விமர்சித்து இருந்தது தற்போது விவாதத்திற்குளாகி இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் உங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்மையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேசி இருந்தது.

அதில் கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது தமிழகத்தில் இவ்வளவு பரவி இருப்பதற்கு காரணம் தேர்தல் ஆணையம் தான். இந்த குற்றச்சாட்டை தவிர்க்க முடியாது எனவும், கடந்த சில மாதங்களாகவே தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வந்ததாகவும், கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும், தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என நீதிபதிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை டி.ஆர்.சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகிய நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் உள்ள வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கையை மேலாண்மை தேர்தல் ஆணையத்தின் கீழ் வராது எனவும், தேர்தல் முடிந்து 20 நாட்கள் கழிந்துவிட்ட நிலையில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையத்தை காரணம் காட்டி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சாட்டி உள்ளதாக தெரிவித்ததுடன், உயர்நீதிமன்றத்தில் வார்த்தைகளை ஊடகங்கள் அதிகம் விவாதிப்பதாகவும், இதற்கு ஒரு எல்லை வகுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்க்கு பதிலளித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மோசமாக செயல்படுவதாக உயர்நீதிமன்றம் கூறியதாக அர்த்தமில்லை எனவும், உயர் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் தாங்கள் சமநிலையில் வைக்க விரும்புவதாகவும் ஊடகங்கள் நம்பகத்தன்மை உருவாக்குவதற்காக தான் அனைத்தையுமே விவாதிப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படக்கூடிய சில கருத்துக்கள் அடிக்கடி பெரிய விவாதத்தை உருவாக்குவதால் ஊடகங்கள் ஜனநாயகத்தின் மிகப் பெரிய கண்காணிப்பாளராக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் சிறப்பாக தான் செயல்படுகிறீர்கள். இருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த கருத்துகளையும் விமர்சனங்களையும் உங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் நேர்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கிறோம், இருந்தாலும், உயர் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் சமநிலையோடு அணுக முயற்சிக்கிறோம் எனவும் தெரிவித்து உள்ளனர். உயர்நீதிமன்றங்கள் இந்த ஜனநாயகத்தின் தூண்கள் எனவும், அவர்களை மன சோர்வடைய வைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளதுடன், அதே நேரத்தில் நீதிமன்றம் தெரிவிக்கக் கூடிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்கும் தாங்கள் தடைவிதிக்க முடியாது எனவும், விரைவில் இந்த வழக்குக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal