65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்து நொறுங்கிய எக்ஸ்.எல் சிக்ஸ் கார்..! நடந்தது என்ன ..?

65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்து நொறுங்கிய எக்ஸ்.எல் சிக்ஸ் கார். 

பொள்ளாச்சி அருகே A.நாகூரை சேர்ந்த 65 வயதான விவசாயி ஈஸ்வரன் என்பவர் தென்னை மரங்களுடன் கூடிய ஒரு தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஈஸ்வரனின் மகள் அவரது தந்தை எளிதாக கார் ஓட்ட வேண்டும் என்பதற்காக ஆட்டோமேட்டிக் கியருடன் இயங்கக்கூடிய புத்தம் புதிய எக்ஸ்.ஏல் சிக்ஸ் கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

ஈஸ்வரன் இந்த காரை தனது வீட்டின் முன்பக்கம் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அவரது பேரன் இந்த காருக்குள் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஈஸ்வரன் பொள்ளாச்சி செல்வதற்காக காரில் புறப்பட்டு காரை ஸ்டார்ட் செய்துள்ளார். வழக்கமாக மேனுவல் கியர் உள்ள வாகனங்களை ஓட்டி பழகி வந்த ஈஸ்வரனுக்கு, ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் குறித்த சரியான விவரம் தெரியவில்லை.

இந்த நிலையில், வழக்கம்போல ஈஸ்வரன் காரின் மேல் பக்கம் கியரை நகர்த்தியுள்ளார் ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டத்தில், மேல் பக்கம் கியரை  நகர்த்தினால் கார் ரிவர்ஸ் செல்லும்.  இது தெரியாமல், ஈஸ்வரன் கவனக்குறைவால் கியரை மேல் நோக்கி அழுத்த, அந்த கார் பின்னோக்கி நகர்ந்து 65 அடி தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து நொறுங்கியுள்ளது .

இதில் காரை ஓட்டிய ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காயங்களுடன் இருந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து ,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் காரை கட்டி மேலே தூக்கினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.