மாணவர்கள் கவனத்திற்கு…இன்று முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர்  முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.பின்னர்,தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில்,மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று (பிப்.1ஆம் தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி,

  • கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பள்ளிக்கு வர தடை.
  • மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கூட்டமாக அமர வேண்டாம்.
  • ஆசிரியர்களும், மாணவர்களும் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.2 வேளை கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
  • வகுப்பறை நுழையும் முன் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்திருந்தால் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • ஆசிரியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும்,15-18 வயது சிறார்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம். அறிகுறி உள்ள மாணவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • மேலும், முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்.
  • எனினும்,நேரடி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan