ரஜினியை சந்தித்து பேசுவாரா அமித் ஷா ? ஆதரவு கேட்க வாய்ப்பு

ரஜினியை சந்தித்து பேசுவாரா அமித் ஷா ? ஆதரவு கேட்க வாய்ப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ஆம் தேதி மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ரஜினியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டார்.மேலும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச்  சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!! என தெரிவித்தார்.குறிப்பாக ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார் ரஜினி.

மருத்துமனையில் ரஜினி அனுமதி :

அண்ணாத்த படப்பிடிப்பிற்கு சென்ற நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினி சென்னை திரும்பினார்.

ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகம் :

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக ரஜினியின் கட்சி குறித்த அறிவிப்பு தள்ளிப்போன நிலையில், அவரது உடல்நிலை காரணமாக அவரது அரசியல் அறிவிப்பு என்னவாகும் என்ற கேள்வி ஆதரவாளர்கள் வெகுவாக எழுந்து வந்தது.

சந்தேகங்களுக்கு மத்தியில் ரஜினி அறிவிப்பு : 

ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கையில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை, ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை. தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்தார். ஆனால் அற்புதம்… அதிசயம்… நிகழும் என எதிர்பார்த்து வந்த ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை :

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 1996-ஆம் ஆண்டு அதிமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ரஜினி :

கடந்த 1996-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்தார்.அப்போது, திமுகவுடன் தமிழக மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதனால், ரஜினி வார்த்தையை கேட்டு தமிழக மக்கள் பலரும் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர்.ஆகவே அதிமுக தோல்வியை தழுவியது.

ரஜினியை அமித் ஷா சந்திக்க உள்ளதாக தகவல் :

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ஆம் தேதி மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர் சென்னை வருவதாக கூறப்படுகிறது.இந்த வருகையின்போது ரஜினியை சந்தித்து அமித் ஷா ஆதரவு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆகவே தமிழகத்தில் தேர்தல் நடைபெற சில மாதங்கள் உள்ள நிலையில் அமித்ஷாவின் இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

Join our channel google news Youtube