“நாடு முழுவதும் மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படும்போது பிரதமர் மோடிக்கு எதற்கு புதிய வீடு?” – பிரியங்கா காந்தி ..!

நாட்டில் உள்ள மக்களுக்கு சுவாசிக்கவே ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் பிரதமர் மோடிக்காக கட்டும் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இதன்காரணமாக,நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஒரே நாளில் 3.5 லட்சத்தை எட்டியுள்ளது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன்,படுக்கை வசதி மற்றும் போதுமான தடுப்பூசி மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு இறக்கின்றனர்.

இந்த நிலையில்,2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டிமுடிக்கப்படும் என்று மத்திய அரசின் பொதுப்பணித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,”கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன், மருத்துவமனைப் படுக்கைகள்,தடுப்பூசி மருந்துகள் போன்றவை முறையாக கிடைக்காமல் நாட்டு மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது,பிரதமர் மோடிக்கு எதற்கு புதிய சொகுசு வீடு?,எனவே மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை  நிறுத்திவிட்டு,அந்தத் மொத்த தொகையையும் கொரோனா செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டும்”,என்று வலியுறுத்தியுள்ளார்.