இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?., வெளியானது ஜனநாயக கூட்டமைப்பின் கருத்து கணிப்பு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பிரபல ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தங்களது தேர்தல் கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 122 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று ஜனநாயக கூட்டமைப்பான Democracy Network தனது கருத்து கணிப்பை தெரிவித்துள்ளது. மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கல் குரல் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிவித்துள்ளது. கருத்துக் கணிப்பின்படி, அதிமுக 122 இடங்களை வெல்லும், 111 இடங்களை திமுகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஒரு தனி இடத்தை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 68 இடங்களில் அதிமுக சுமார் 40 தொகுதிகளிலும், திமுக 28 தொகுதிகளும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

அதேபோல், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தில் 34 இடங்களில் அதிமுகவுக்கும், 24 இடங்களில் திமுகவுக்கும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளடக்கிய நடு நாடு மண்டலத்தில் அதிமுக 8, திமுக 12 இடங்களை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ மண்டலத்தில் அதிமுக 20 தொகுதிகளும், திமுக 21 தொகுதிகளிலும் கைப்பற்றும் என கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாண்டிய மண்டலத்தில் அதிமுக 20, திமுக 26 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது.

ஆனால், இந்த தேர்தலில் சோழர் மற்றும் பாண்டிய மண்டலத்துக்கு உட்பட பகுதிகளில் அதிமுகவை விட திமுக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தும் என்றும் இந்த பாண்டிய மண்டலத்தில் அமமுக கூட்டணியானது ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

மேலும், இந்த தேர்தல் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ள கருத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயியாகப் பார்ப்பது முக்கிய காரணியாகவும், சமீபத்தில் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியானது அதிமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்