இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது? – தலைமை செயல் அதிகாரி விளக்கம்.!

ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு போட்டி நடைபெறுமா என்று கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஆனால், தற்போது ஊரடங்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருப்பதால் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, அனைத்து நாட்டு வீரர்களையும் ஒன்றாக சேர்க்கும் போட்டியில் ஐபிஎல் போட்டி சிறப்பானது. தேர்தலில் ஓட்டுபோட்ட மக்களை விட அதிகமானவர்கள் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை பார்த்து இருக்கிறார்கள். ஸ்பான்சர் விஷயத்தில் கிரிக்கெட் தான் முன்னிலையில் இருக்கிறது. உலகின் சிறந்த வீரர்கள் வந்து விளையாடுவது தான் ஐ.பி.எல். போட்டியின் தனி சிறப்பாகும். அது தொடரவேண்டும் என்று எல்லோரும் உறுதியாக இருக்கிறார்கள். இதுகுறித்து படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும். 

மேலும், ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது. இதனால் போட்டியில் பங்கேற்பது குறித்து வீரர்கள் எடுக்கும் முடிவை நாம் மதிக்க வேண்டும். குறிப்பாக அரசின் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று கூறியுள்ளார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு முடிந்ததும், பருவ மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தொடங்கி விடும். இதனால், மழைக்காலம் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கு முன்னதாக தற்போதைய நிலைமையில் இருந்து விரைவில் முன்னேற்றமடையும் என்று நம்புகிறோம். அதற்கு தகுந்தபடி எங்களது அணுகுமுறை அமையும் என தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்