காவிரி பிரச்சனை என்றால் என்ன? தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் அப்படி என்ன தகராறு? எளிதாக புரியம் வகையில்..!

இந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றான காவிரி கர்நாடகா மாநிலத்தின் கோடகு மாவட்டத்தில் உள்ள தலகாவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகி ஹசான், மாண்டியா, மைசூர் போன்ற கர்நாடக மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது; தமிழ்நாட்டின் தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மற்றும் பிற தமிழக மாவட்டங்களில் பாய்ந்தோடுகிறது காவிரி ஆறு.

765 கிலோமீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆறு தமிழகம் மற்றும் கார்நாடக மாநிலங்களில் பாய்ந்தோடுவதோடு, காவிரியும் அதன் துணை ஆறுகளும் கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடி, வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

பிரச்சனை என்ன?

இவ்வாறு 4 மாநிலங்கள் இடையே பாய்ந்தோடும் காவிரியை எப்படி பிரித்துக் கொள்வது மற்றும் எந்த மாநிலம் எவ்வளவு நீர் பெறுவது என்பது தான் இப்பிரச்சனையின் ஆணிவேர் ஆகும்.

நான்கு மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடினால் பெரும்பாலும் பங்கு கேட்டு வழக்காடுவது தமிழகம் மற்றும் கர்நாடகா போன்ற இரு மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் ஆகும்.

பிரச்சனையின் நாடி..

கர்நாடகா

கர்நாடகாவில் உருவாகும் காவிரியை, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் மாநிலத்தில் உற்பத்தி ஆகும் ஆறில், தங்களுக்கே அதிக பங்கு என்று வழக்காடுகின்றனர்; மேலும் அவர்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தின் ஆதார சக்தியாக திகழ்வது இந்த காவிரி தான் என்றும் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் மக்களோ, எங்களது முன்னோரான கரிகால சோழன் காவிரியின் மீது கல்லணை கட்டிய காலத்திலிருந்தே, காவிரி தமிழக மக்களுக்கு சொந்தமானது. அதிலும் தமிழ்நாட்டின் முக்கிய டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்றவற்றின் விவசாயத்தின் ஆணிவேராக இருப்பது காவிரி தான்.

மழை பொய்த்தாலும் காவிரி நீரால், டெல்டா பகுதிகளில் விவசாயம் நடக்க வேண்டும் எனும் நோக்கை தனது வாதமாக முன்வைக்கிறது தமிழ்நாடு.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்குமான தகராறு

இப்படி ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்து, சுதந்திரம் கிடைக்கும் முன்னான காலத்தில் இருந்தே அதாவது 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகமும் கார்நாடகாவும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. இவ்வளவு காலம் ஆகியும், இப்பிரச்சனைக்கான இன்னமும் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

எப்பொழுதெல்லாம் காவிரி குறித்த பிரச்சனை எழுகின்றதோ, அச்சமயங்களில் எல்லாம் கார்நாடகா மற்றும் தமிழக பகுதிகளில் போராட்டங்களும், கடை அடைப்பு நிகழ்வுகளும் தலைவிரித்தாடுகின்றன. இப்பிரச்சனையின் தீவிர மற்றும் விரிவான அலசலை அடுத்த பதிப்பில் படித்தறியுங்கள்..!

author avatar
Soundarya

Leave a Comment