இடைத்தேர்தலில் பாஜகவை புறக்கணிக்கிறதா அதிமுக.? முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை..?

கூட்டணி கட்சியான பாஜகவின் பெயரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தவிர்த்து வந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக இருக்கிறது. ஆதரவு அறிவித்த பின்னராவது இன்று முதல் அதிமுக – பாஜக இணைந்து செயல்படுமா என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்போது அதிமுக கட்சியின் பின்புறம் பாஜக இருக்கிறது என்பதும், பாஜக தான் அதிமுக தலைமைக்கு ஆலோசனை வழங்குகிறது என்ற விமர்சனங்களும், அரசியல் வட்டாரத்தில் அவ்வபோது எழுகிறது.  அந்த மாதிரியான விமர்சனங்கள் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனமாக வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

அதற்கு ஏற்றார் போல் அண்மையில் கூட ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தனித்தனியே பிரிந்து இருந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக ஆதரவு கேட்டு பாஜக அலுவலகத்திற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழக பாஜக, எடப்பாடி பழனிச்சாமி க்கு ஆதரவு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு என தெரிவிக்காமல், பொதுவாக அதிமுகவுக்கு ஆதரவு எனவும் தெரிவிக்காமல் தங்கள் நிலைப்பாடு பற்றி பிறகு அறிவிப்போம் என்றே குறிப்பிட்டு வந்தனர். அதற்குள்ளாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவித்து அதற்கான தேர்தல் வேலைகளையும் ஆரம்பித்தது. நேற்று தான் பாஜக தங்களது ஆதரவு அதிமுகவுக்கு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டது.

இதற்கிடையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக பணிமனையில் பாஜகவில் பெயர் இடம் பெறவில்லை. அதேபோல அதிமுக தேர்தல் பிரச்சார நோட்டீஸில் கூட பிரதமர் மோடி புகைப்படமோ பாஜக தலைவர்கள் புகைப்படமோ இல்லை இதன் காரணமாக கூட்டணி கட்சியான பாஜகவை இடைத்தேர்தல் களத்தில் அதிமுக புறக்கணித்து உள்ளதா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஒருவேளை நேற்று தான் அதிமுகவுக்கு ஆதரவு என்று பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்ததன் காரணமாகவும் அதற்கு முன்னரே தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தாலும் பாஜகவின் பெயரை அதிமுக தவிர்த்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இன்று முதல் தேர்தல் களத்தில் பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment