தடுப்பூசி போட்ட பின் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

  • தடுப்பூசி செலுத்திய பின் கொரோனா ஏற்பட்டால் மரணம் நிகழாது என எய்ம்ஸ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிடும் என தகவல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவை அழிப்பதற்கான ஒரே தீர்வாக தடுப்பூசியை தற்பொழுது நம்பியுள்ளனர். எனவே, பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் மூன்றாவதாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், தற்பொழுது மிகக் குறைவான இடங்களில் தான் இந்த  தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கான இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களும் கொரோனாவால் பாதிப்படைவதாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.

இந்த ஆய்வின் பின் எய்ம்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 டேஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 நோயாளிகள் மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 நோயாளிகள் என மொத்தம் 63 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் 10 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், மீதமுள்ள 53 பேர் கோவாக்சின் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள். தடுப்பூசி போட்ட பின்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பாதிப்பின் அளவும், 5 முதல் 7 நாட்கள் வரை இந்த நோயாளிகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தடுப்பூசி போடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை போலவே தொற்றின் தாக்கம் இருந்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் கொரோனாவை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால், மற்ற நோயாளிகளைப் போல உடல் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal