சென்னையை தவிர பிற மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்.? – தமிழக அரசு அறிவிப்பு.!

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்.? – தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் அறிவித்து, அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கான தளர்வுகள் :

தொழில் நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்னினும் இயன்ற வரை வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை 50% பணியாளர்களுடன் செயல்படலாம். கடைகளில் குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக்கூடாது என்று தமிழக  அரசு தெரிவித்துள்ளது. டீ கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 8 ஆம் தேதி முதல் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஹோட்டல், டீ கடைகளில் மொத்தம் இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை கார்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயங்கலாம் என்றும் ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மண்டலங்களில் 7 வது மண்டலமான (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு), 8 வது மண்டலமான ( சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி) ஆகிய மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube