ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள் என்னென்ன..?

ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள் என்னென்ன..?

மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு மிகவும் முக்கியமானது தன்னலமற்ற தன்மை தான். சுயநலமில்லாமல் வாழக்கூடிய கணவன் மனைவி தான் கடைசி வரை மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் இது எல்லா உறவுகளுக்குள்ளும் அமைந்து விடுவதில்லை. பலர் சுயநலமானவர்களாக இருப்பார்கள்.

கணவன் மனைவி உறவுக்குள் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் தங்களை அதிகம் நேசிக்க வேண்டும், தனக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என விரும்புவது வழக்கம். பெண்கள் தன்னை தனது கணவர் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது போல ஆண்களிடமும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இவ்வாறு ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் எதிர்பார்க்க கூடிய ஐந்து முக்கியமான விஷயங்கள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

கருத்து பரிமாற்றம்

கணவன் மனைவி உறவுக்குள் இருக்க கூடாத ஒன்று ஒளிவுமறைவு தான். இருவருக்குள்ளும் வெளிப்படைத்தன்மை அதிக அளவில் இருக்க வேண்டும். அது போல முன்னமே கணவனுக்கு என்ன தேவை என்பதை மனைவி தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் கணவர்கள் விரும்புவார்களாம்.

ஏதேனும் சற்று கூச்சப்படும்படியான விஷயங்களை கேட்க வேண்டும் என நினைக்கும் பொழுது, மனைவியிடம் எப்படி இதை கேட்பது என சில தயக்கம் இருக்கும். ஆனால் மனைவி அதை முன்கூட்டியே தெரிந்து வைத்து கணவனின் தேவைகளை பூர்த்தி செய்வதை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள் எனவும் கூறப்படுகிறது.

மரியாதை

மரியாதை எல்லோரும் எல்லாரிடமும் எதிர்பார்க்க கூடிய ஒன்று தான். எதிர்பார்த்த இடத்தில் மரியாதை கிடைக்காவிட்டால் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் பெரும்பாலும் தெரிந்து இருக்கும். அது போல தான் ஆண்கள் தங்கள் மனைவிகள் தங்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவார்களாம்.

ஆனால், மனைவிகள் கணவர்களிடம் மரியாதை அற்றவர்களாக நடந்து கொள்ளும் பொழுது ஆண்களுக்குள் தாழ்வு மனப்பான்மை உருவாகுமாம். மேலும், மனைவியிடம் இருந்து அன்பை இழந்து விட்டோமோ என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்படுமாம். எனவே தனி அறையில் இருக்கும் பொழுதும் சரி உறவினர்கள் முன்பதாக இருக்கும் பொழுதும் சரி பெண்கள் ஆண்களை மதிக்க வேண்டும் என ஆண்கள் விரும்புவார்கள்.

கவனச்சிதறல்

ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை தனது மனைவியிடம் கூற வேண்டும் என விரும்புவார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். வெளியில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் வேலை தளத்தில் என்னென்ன நடந்தது என்பதை ஆண்கள் கூறுவார்கள்.

இவ்வாறு கூறும் பொழுது பெண்கள் அதை உற்று நோக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் வேறு எதையோ யோசித்து வேறு எங்கும் பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தால் ஆண்கள் அவமதிக்கப்படுவதாக உணர்வார்களாம்.

நேரம்

ஆண்கள் பெண்கள் தங்களுக்கான ஒரு முறையான நேரத்தை ஒதுக்க வேண்டும் என விரும்புவார்களாம். தன் மனைவி நேரம் ஒதுக்கி,  தன்னுடன் பேச வேண்டும், அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆண்கள் விரும்புவார்கள். குழந்தைகள் உள்ள தம்பதிகளிடையே குழந்தையை கவனிக்க வேண்டும், வீட்டை கவனிக்க வேண்டும் எனவே மனைவியை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஆண்கள் ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் கூட வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இருக்கக்கூடிய கொஞ்ச நேரத்தில் கணவனுடன் நாம் நேரத்தை செலவிட வேண்டும். அவ்வாறு செய்வது ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். ஆனால் அவ்வாறு நாம் செய்யாமல் நமது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு சென்றால் நம்மிடமான எதிர்பார்ப்பை கணவன்மார்கள் குறைக்க தொடங்கி விடுவார்களாம்.

உடல் பாசம்

ஆண்கள் தங்கள் மனைவியிடம் பாலியல் உறவை மட்டும் விரும்புவதில்லை. சாதாரமாக மகிழ்ச்சியான மற்றும் துன்பமான நேரங்களிலும் மனைவியின் தொடுதல் இருக்க வேண்டும் என விரும்புவார்களாம்.

 

அதே போல இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் ஆண்களின் தோள்பட்டையில் மனைவிகள் 5 நிமிடமாவது சாய்ந்திருக்க வேண்டும் என விரும்புவார்களாம். எனவே, மனைவிமார்கள் கணவனுக்கு பிடித்த சில விஷயங்களையாவது முறையாக செய்ய வேண்டும். இவ்வாறு இருந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube