“நேரம் வந்துவிட்டது” – ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ!

டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ,இந்த வாரம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனது கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.அவருக்கு 38 வயது.

பிராவோ,கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு,ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

இதற்கிடையில்,டி-20 உலகக் கோப்பை தொடரில்,நேற்று இலங்கையுடன் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்து அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியது.இந்த நிலையில்,ஆஸ்திரேலிய அணியுடன் நாளை நடக்கும் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.

மேலும்,இதுதொடர்பாகபிராவோ கூறியதாவது:”ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியுள்ளது பெருமையாக இருக்கிறது.எனினும்,அதில்  நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.இந்த டி-20 உலகக் கோப்பை தொடர், நாங்கள் எதிர்பார்த்தது அல்ல. இது கடினமான போட்டி. இருந்தாலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.

எனினும்,ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங் அணியின் முக்கிய வீரரான பிராவோ, டி-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவாரா? என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

2004 முதல்,வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிராவோ,40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 90 டி20  போட்டிகளில் விளையாடியுள்ளார்.2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.