கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வேதா ஜடேஜா ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு அகமாதாபாத்தில் உள்ள மகிளா காவல்நிலையத்தில் எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தவர் ஸ்வேதா ஜடேஜா. இவர் விசாரித்து வந்த கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய ஒருவரை விடுவிக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால், போலீசார் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் இவரை கைது செய்துள்ளனர்.
அஹமதாபாத்தில் உள்ள நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் ஷா. இவர் மீது இரண்டு கற்பழிப்பு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் ஒரு வழக்கை எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜா விசாரித்து வந்துள்ளார்.
அப்போது அந்த வழக்கில் இருந்து விடுவிக்க ஷாவின் சகோதரரிடம் 35 லட்சம் லஞ்ச பேரம் பேசியுள்ளார். இதில், 20 லட்சத்தை இடைத்தரகர் மூலமாக பெற்றுள்ளார். மேலும், 15 லட்சம் கொடுக்கும்படி தொந்தரவு செய்துள்ளார். கொடுக்காவிட்டால் கைது செய்து மாவட்டத்திற்கு வெளியில் உள்ள சிறையில் அடைத்துவிடுவேன் என கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் அறிந்த போலீசார் எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜாவை ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர். தற்போது அவர், நீதிமன்ற காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.