ஆயுதப்படைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் – ராஜ்நாத் சிங் ட்வீட்

இந்தியாவை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் எங்கள் ஆயுதப்படைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 – சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாலகோட் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது.இந்திய விமானப்படையின் இந்த தாக்குதலில் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் 200 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலகோட் தாக்குதல் நடைபெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.இதனிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  பாலகோட் விமானத் தாக்குதலில், இந்திய விமானப்படையின் தைரியத்திற்கும், விடாமுயற்சிக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.பாலகோட் தாக்குதலின் வெற்றி பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படும் இந்தியாவின் வலுவான விருப்பத்தை காட்டுகிறது.இந்தியாவை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் எங்கள் ஆயுதப்படைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.