துரைமுருகன் அடுத்த விக்கெட், அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்திகள் தினமலர் (7.8.2020) அன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது.இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.என் வரலாறு தினமலருக்கு தெரியாது போலும். எம்.எல்.ஏ, எம்.பி, – அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன், அண்ணாவின் திராவிட நாடு கொள்கைப் பார்த்து ஒரு போராளியாக 1953ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து, இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது தினமலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். தினமலர் தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் துரைமுருகன் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் பதில் கூறுகையில், துரைமுருகனை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கத் தயார். துரைமுருகன் வந்தால் கட்சி நல்ல முடிவு எடுக்கும்திமுகவின் முதல் விக்கெட் கு.க.செல்வம்.அடுத்த விக்கெட் துரைமுருகன் தான் . திமுக பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறார் துரைமுருகன்.அதிமுக ஒரு ஆலமரம், அதிருப்தியில் உள்ள திமுகவினருக்கு நிழல் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.