“பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்” – அதிபர் டிரம்ப் உரை

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அதிபர் டிரம்ப், “பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், 4 நாட்களுக்கு பின் கடந்த திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்பொழுது புகைப்படத்திற்கு போஸ் குடுத்த அவர், தான் அணிந்திருந்த முகக்கவசத்தை கழற்றி, தனது ஆதவர்களிடையே கையசைத்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையானது.

இந்தநிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் தனது ஆதவாளர்களிடம், “நான் நன்றாக இருக்கிறேன். இந்த பயங்கரமான சீனா வைரஸை நம் தேசம் முற்றிலுமாக ஒழிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்” என கூறினார். மேலும், “நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாகும். தைரியமாக வெளியே சென்று தைரியமாக வாக்களியுங்கள்” என உரையாற்றினார்.

அதுமட்டுமின்றி, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோரை இடதுசாரி அரசியல்வாதிகள் என விமர்சித்தார். அவர்கள் நடத்தும் அவதூறு பிரச்சாரத்தை நாம் அனைவரும் நிராகரிக்க வேண்டிய நேரம் இது எனவும் அந்த உரையில் அவர் தெரிவித்துள்ளார்.