சசிகலாவுடன் எல்லோரும் உறவாகத் தான் இருந்தோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

இன்று முதல்வர் பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனிடையே சசிகலாவின் விடுதலை குறித்து அவரது வழக்கறினரான ராஜா செந்தூர்பாண்டியனுக்கு சிறை நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி கடிதம் கிடைத்திருக்கிறது.அந்த கடிதத்தில், ஜனவரி 27-ஆம் தேதி புதன்கிழமை காலை சசிகலா விடுதலையாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி ,சசிகலா வெளியில் வந்த பிறகு 100 % இணைய வாய்ப்பில்லை என்று கூறினார்.

 இந்நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் சசிகலா குறித்து கூறுகையில்,ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவுடன் எல்லோரும் உறவாகத் தான் இருந்தோம்.இன்றைக்கு இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்.அரசு திடமாக இருக்க வேண்டும்.எனவே இன்று முதல்வர் பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம்.நாங்கள் மட்டும் அல்ல .அதிமுகவினர் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்