டாஸ்மாக் கடைகளை திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – விஜயகாந்த்

கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ளது.ஆனால் 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக  ஆந்திரா,கர்நாடகா,டெல்லி,மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள்  திறக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாங்கி சென்றனர்.ஆனால் இந்த சமயத்தில் பல இடங்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக அமைந்தது.

இதற்கு இடையில் தான் தமிழகத்தில் வருகின்ற 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தடைசெய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளித்தது.ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக்  கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று அறிவித்தது.ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,டாஸ்மாக்  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. கடைகளை மே 7-ஆம் தேதி திறக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.