மனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும் – கனிமொழி

கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி கிராமத்தில் ஒருவருடைய வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதால்தான், இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும், நாம் இன்னும் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும். கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.