சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் ரெடி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்கள் சங்கி கிடையாது, சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனம் ஆவின் ஹவுஸில் சிறப்பு இனிப்பு வகைகளை தீபாவளிக்கு விற்பதற்காக இன்று தொடங்கி வைத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆவின் பாலகம் தாய்ப்பாலுக்கு நிகராக உள்ள பாலையே வழங்குவதாகவும், கொரோனா தொற்றுக்கு அமெரிக்க அதிபர் பயந்த போதிலும் ஆவின் ஊழியர்கள் பயப்படவில்லை என்றும் கூறினார்.

இதனிடையே  திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி பேசுவதாகவும், அவர் மிரட்டல் செய்யும் அமைச்சராக வலம் வருவதாகவும் குற்றச்சாட்டியதோடு, அமைச்சரை சங்கி என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், நாங்கள் சங்கி கிடையாது. சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது என்று கூறினார். மேலும் அதிமுகவும், பாஜகவும் கடவுள் பக்தியில் ஒன்று என்றும், பாஜகவுக்கு வேல் யாத்திரை நடத்த உரிமை உண்டு என்றும் கூறிய அவர், பிரஷாந்த் கிஷோரை தேர்தல் வெற்றிக்காக ஸ்டாலின் நம்பியிருப்பதாகவும் கூறியுள்ளார்.