உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நாங்கள் நிர்பந்திக்கவில்லை – மு.க.ஸ்டாலின் விளக்கம்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நாங்கள் நிர்பந்திக்கவில்லை – மு.க.ஸ்டாலின் விளக்கம்

மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முன்வந்தது,தி.மு.க.வின் நிர்பந்தத்தால் நடைபெற்ற நிகழ்வு அல்ல என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. புதுச்சேரி உட்பட 39 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின.இதனையடுத்து,இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.ஆங்கில நாளிதழுக்கு மு.க.ஸ்டாலின்  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவரிடம் ,கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. தற்போது அவை தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு கருதி கூட்டணி கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முன்வந்தன. அது தி.மு.க.வின் நிர்பந்தத்தால் நடைபெற்ற நிகழ்வு அல்ல.

பேரறிஞர் அண்ணா அவர்கள், தலைமையில் நடந்த தேர்தலின் போதே சில கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு சின்னத்தில் போட்டியிட தோழமைக் கட்சி முன்வரும் போது அதனை வழங்குவது எங்கள் கடமை. இது நட்பின் அடிப்படையிலானது. இதில் நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம் என்பது எல்லாம் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் செய்யும் சதிகள். அதற்கு ஊடகங்கள் பலியாக வேண்டாம் என்று தனது பதிலை தெரிவித்தார்.
Join our channel google news Youtube