அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சுவோரல்ல நாங்கள் – முக ஸ்டாலின் ஆவேசம்

திமுக-வின் மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும். இது உறுதி என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த உள்ளதாக திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி, அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் முக ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். அரசு அனுமதி வழங்கப்படாத நிலையில், கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, திமுகவின் ‘கிராம சபை’ கூட்டங்கள் இனி ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி, இன்றும் முக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில், திமுக-வின் மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும் என்று முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நேற்று 1100 என்ற அளவில் நடத்த மக்கள் கிராம – வார்டு சபைக் கூட்டங்கள், இன்று 1600க்கும் அதிகமாக நடத்துள்ளன. 200 தொகுதிகளில் வெற்றி என்பது நம் முதல் இலக்கு. அ.தி.மு.க அமைச்சர்களில் ஒருவரும் வெற்றி பெறக்கூடாது என்பது இரண்டாவது இலக்கு. இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத் துறையினரின் அறிக்கைகளும், மக்களின் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது.

மேலும், அதிமுக அரசுக்கு தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி திமுகவை ஒருபோதும் அடக்கிவிட முடியாது. நாங்களும் அதிகாரத்தில் இருந்தவர்கள். சட்டத்தை நன்கு அறிந்தவர்கள். சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளால் திமுகவை சீண்டி பார்க்க வேண்டாம். திமுகவின் கூட்டங்களுக்கு தடை போட நினைத்தால், அதற்கான பதிலடி நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்