சீதையை மீட்டெடுத்த அனுமனைப் போல தமிழர்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் – இபிஎஸ், ஓபிஎஸ்!

நாட்டை கெடுப்பவர்கள் ஆட்சி அமைந்துவிடாமல், ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடரட்டும் என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மநீம, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டியாக களம் காண்கின்றனர். தேர்தல் பரப்புரையில் இறுதி நாளான இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற்றது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனிடையே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், உங்கள் உழைப்பை ஊர் பேசட்டும், நாம் செய்த நன்மைகளை நாடு பேசட்டும். வெற்றி செய்தி எட்டுத்திக்கும் முழங்கட்டும், தமிழக மக்களின் வாழ்வு செழிக்கட்டும் என கூறியுள்ளனர்.

நாட்டை கெடுப்பவர்கள் ஆட்சி அமைந்துவிடாமல், ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடரட்டும். இந்த தேர்தல் நீதிக்கும், அநீதிக்கும் நடைபெறும் போர்க்களம். இதில் நீதி வெல்ல வேண்டும். தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறும் யுத்தம், இதில் தர்மம் வெல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற வேண்டும்.  சித்ரவதையில் சிக்கி தவித்த சீதையை மீட்ட அனுமனை போல தமிழ் மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம் என்றும் தமிழ் தாய்மார்களை ஏமாற்றுவதற்காக ஒரு மாய வலையை திமுக வீசி கொண்டியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்