எங்கள் டென்ஷனை குறைக்கும் வீரர்! தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா……

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை,  பாராட்டியுள்ளார்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி, 176 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 89 ரன்களும் சுரேஷ் ரெய்னா 47 ரன்களும் விளாசினர். ஷிகர் தவன் 47 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை பங்களாதேஷ்- இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இந்தியாவுடன் ஃபைனலில் களமிறங்கும்.

வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, ‘’நான் மீண்டும் ஃபார்முக்கு வந்ததில் மகிழ்ச்சி. இந்தப் போட்டியில் 10, 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைத்தேன். பங்களாதேஷ் அணி, சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தியது. எங்கள் தரப்பில், வாஷிங்டன் சுந்தர் நன்றாகச் செயல்பட்டார். அவரது மேஜிக்கான பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்ந்தது. புதிய பந்தில், ஸ்பின்னர் ஒருவர் விக்கெட் எடுப்பது எளிதான விஷயமல்ல. அதனால் அவருக்கு ஹாட்ஸ் ஆஃப். ஒவ்வொரு போட்டியிலும் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். எந்த சூழ்நிலையிலும் அவர் தைரியமாக பந்துவீசுவது பிரமிக்க வைக்கிறது. அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறார். அதன் மூலம் எங்கள் டென்ஷனை குறைக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அதோடு மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். சிராஜ் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததை பற்றி கேட்கிறார்கள். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிக்கு திரும்பியிருக்கிறார். அதனால் அவருக்கு பதற்றம் இருந்தது. ஆனால் அவர் திறமையான பந்துவீச்சாளர். அடுத்தடுத்தப் போட்டிகளில் அவர் நன்றாக செயல்படுவார். இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னாவும் நன்றாக ஒத்துழைப்புக் கொடுத்தார். ஃபைனலிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment