சபரிமலையில் மே 14 ஆம் தேதி நடை திறப்பு;பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு…!

சபரிமலையில்,வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி நடை திறக்கப்படும் எனவும்,ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் வரை,ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 5000 பக்தர்களுக்கு தினசரி அனுமதி வழங்கப்பட்டு வந்தது.எனினும்,சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை  தொடர்ந்து இன்று முதல் மே 16 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்த முழு ஊரடங்கின்போது அனைத்து கடைகள் மற்றும் மத வழிப்பாடு தலங்களும் மூடப்பட்டு உள்ளது.

இருப்பினும்,வைகாசி மாதம் நடைபெறவுள்ள பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற மே 14 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,சபரிமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார் கூறுகையில்,”சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற மே 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளை 12 உறுப்பினர்களைக் கொண்ட வேத சுவாமிகள் வழிநடத்துவார்கள்.ஆனால்,பூஜை நடைபெறும் நாட்களில் கோவிலின் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்”,என்று கூறினார்.