“தன்னார்வலர்களே…இவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர கூடுதல் முயற்சி வேண்டும்” – எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

மதுரை:கொரோனா நெருக்கடி காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் இழப்புகள் குறித்து உரிய சான்றிதழ் பெற முடியாதவர்களுக்கு தன்னார்வலர்களும்,இயக்கத்தோழர்களும் உதவ வேண்டுமென எம்பி சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான அரசின் நிவாரணங்களை பெற்றுத் தரும் முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று தன்னார்வலர்களுக்கு மதுரை எம்பி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரிருப்பதவது:

கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கான மாநில அரசு & மத்திய அரசு தரும் நிவாரணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும்.

ஏனெனில் நடைபெற்று முடிந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்ட விபரத்திற்கும் நிவாரணத்திற்காக பதிவு செய்துள்ள எண்ணிக்கைக்கும் இடைவெளி கூடுதலாக உள்ளது.

சமூகப்பாதுகாப்புத் துறையின் விபரங்களின் படி மதுரை மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 478. அதில் 258 பேர் ஆய்வு செய்யப்பட்டு இன்னும் 163 பேர் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ள என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் அதில் 13 பேருக்கு மட்டுமே நிவாரணத்திற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.நிவாரணம் குறித்த பெரிய அளவில் மக்களிடம் செய்திகள் சென்றடையாத நிலை உள்ளது.கொரோனா நெருக்கடி காலத்தில் இழப்புகள் குறித்து உரிய சான்றிதழ் பெற முடியாதவர்களுக்கு தன்னார்வலர்களும்,இயக்கத்தோழர்களும் உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணத்திற்காக கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் தங்களது விண்ணப்பங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் பொது நிவாரண நிதி:

A.கணேசன் – சமூக பாதுகாப்பு திட்டம் ,மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக 3 வது தளம், மதுரை.

பிரதமர் நிவாரண நிதி:

K.ஸ்ரீதர் – பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதுரை”,என்று தெரிவித்துள்ளார்.