“நடிகர் விவேக் மறைவிற்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

நடிகர் விவேக் மறைவிற்கும், அவர் போட்டுக்கொண்ட கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி, 11-ம் மண்டலத்தில் இயங்கிவரும் போரூர் பகுதியில் இயங்கிவரும் கொரோனா ஸ்கிரீனீங் சென்டர் மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவலின் இரண்டாம் அலையை தடுக்க மாநகராட்சி தரப்பிலும், சுகாதாரத்துறை தரப்பிலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், சென்னை மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை 25 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், நடிகர் விவேக் மரணம் பெரிய பேரிழப்பாக கருதுகிறேன். அவர் இறப்பிற்கும், கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கூறி வருவதாகவும், இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாககூறினார். சென்னை முழுவதும் 12 ஸ்கிரீனிங் மையங்கள் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிரித்து அனுப்பப்படுவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும். இங்கு தடுப்பூசி போடப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.