விராட் கோலி அதிரடி சதம்..! குஜராத் அணிக்கு 198 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs GT போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 197/5 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்  மோதுகின்றன.

பெங்களூரில் மழைபெய்ததால் டாஸ் போடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூரு அணியில் விராட் கோலி, டு பிளெசிஸ் முதலில் களமிறங்கினர். இதில் டு பிளெசிஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி அதிரடியாக விளையாடினாலும், மேக்ஸ்வெல்(11 ரன்கள்) மற்றும் மஹிபால் லோமரோர்(1 ரன்) அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின், சிறப்பாக விளையாடிய கோலி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் அடிக்க, மைக்கேல் பிரேஸ்வெல் கோலியுடன் இணைந்து ரன்கள் எடுத்த நிலையில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின், விராட் கோலி இறுதிவரை நின்று அதிரடி காட்டி சதமடித்து அசத்தினார். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், டு பிளெசிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், அனுஜ் ராவத் 23* ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணி சார்பாக நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.