அமெரிக்காவில் நடக்கும் வன்முறைகள்.. காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு கொலை வழக்கில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, தற்பொழுது அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து  கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு பல தரப்பின மக்கள், பிரபலங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில், “டி.சி.யில் எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைந்த கூட்டமே காணப்படுகிறது. இதற்காக தேசிய காவலர், இரகசிய சேவை மற்றும் டி.சி. காவலர்கள் நன்றாக பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டார்.

டிரம்பின் இந்த பதிவு, நாட்டுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ போராட்டத்தில் கலந்து கொண்டு, முழங்காலிட்டு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.