Vinayagar Chaturthi 2023

Vinayagar Chaturthi 2023 : விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ‘கடும்’ கட்டுப்பாடுகள்.! தமிழக காவல்துறை அறிவிப்பு.!

By

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அதே போல விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள், ஊர்வலங்களின் போதுதான் வன்முறைகள் எழும்.

இந்த வன்முறை சம்பவங்கள் , பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் காரணிகளை தடுக்க தமிழகம் முழுவதும் 74,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போல விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழக காவல் துறை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளில், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவு படி பாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட சிலைகளுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை 10 அடி உயரத்திற்கு அதிகமாக இருக்க கூடாது என்றும், ஊர்வலத்தின் போது காவல்துறையினர் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும், விநாயகர் சிலை ஊர்வலம் முழுக்க காவல்துறை கண்காணிப்பில் டிரோன் கேமிரா மூலமும், சிசிடிவி கேமிரா மூலமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேற்று மத வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும்,  அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணிநேரமும் அதன் நிர்வாகிகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே சிலைகள் கொண்டுவரப்பட வேண்டும். பட்டாசுகள் வெடிக்க கூடாது . காலை 2 மணிநேரம் , மாலை 2 மணிநேரம் மட்டுமே ஒலிபெருக்கிகள் கொண்டு பாடல் ஒலிக்கப்பட வேண்டும். ஊர்வலத்தின் போது மத கோஷங்களை எழுப்ப கூடாது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு பந்தல் அமைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.